வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர் தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
விளக்கம்
சென்ற பாடலில் கரக்கோயில் சென்று தொழுது உய்யுமாறு அறிவுரை கூறிய அப்பர் பிரான் இந்த பாடலில், அடியார்களுக்கு அருள்புரியும் வகையினை எடுத்துரைக்கின்றார். நாம் நமது வாழ்வினில் செல்வத்தை பெரிதாக மதிக்கின்றோம். நம்மிடம் செல்வம் இருந்து விட்டால், அந்த செல்வத்தைக் கொண்டு நமது விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றோம். அந்த நினைப்பு தவறு என்பதை உணர்த்தும் வண்ணமும், இந்த செல்வத்தை விடவும் உயர்ந்த செல்வம் பெருமான் அளிக்கும் முக்திச் செல்வம்தான் என்பதை உணர்த்தும் விதமாகவும், செல்வம் உடைய தேவர்கள் தொழுகின்ற பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை
தன்னைப் பற்றிய சிந்தனைகள் தவிர வேறு எந்த சிந்தையும் இல்லாத அடியார்களின் தீவினைகள் சிதறுமாறு, அவர்களுடன் பிணைந்திருந்த தீவினைகளை கூறு செய்யும் அழகனாகிய பெருமான் உறையும் இடமாகிய, வளர்கின்ற செல்வம் உடையவர்களாக விளங்கும் இமையோர்கள் தொழும் கரக்கோயில், காவிரி ஆற்றின் வளங்கள் சேர்ந்துள்ள கடம்பூர் நகரத்தில் உள்ளது.