பற்றவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே
விளக்கம்
பற்றவன் = அனைத்து பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடாக இருப்பவன். கயவர் = கீழ்மைக் குணம் கொண்டவர்கள். இந்த சொல் மூலம், திரிபுரத்து அரக்கர்கள், வைதீக மதத்தையும் சிவநெறியையும் நிந்தித்த செய்கை உணர்த்தப்படுகின்றது. செற்றவன் = வெற்றிகொண்டவன். முனிவர்களும் தவசிகளும் சடை வைத்து இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் எவரும் சடையான் என்று அழைக்கப்படுவதில்லை. அனைவர்க்கும் முதல் முனிவனாகத் திகழும் பெருமான்தான் சடையான் என்று அழைக்கப்படுகின்றான்.
பொழிப்புரை
உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும், உயிர்களுக்கும் பற்றுக்கோடாகத் திகழும் இறைவன், கங்கை நதியையும் பாம்பினையும் சந்திரனுடன் தனது சடையில் வைத்துக்கொண்டுள்ளான். அனைத்து முனிவர்களுக்கும் தவத்தோர்களும் முன்மாதிரியாக இருக்கும் சடையானாகிய அவன், உயர்ந்த ஞானங்களை இயல்பாகவே கற்றவன். கீழ் மக்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஓரே அம்பினால் வீழ்த்தி அவர்களை வென்ற பெருமான் உறைகின்ற வெண்காடு தலம் சென்று, நெஞ்சமே, நீ இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவாயாக.