காரழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி
நீர் அழல்சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தியாடும் ஆவடுதுறை உளானே
விளக்கம்:
காரழல் = நெருப்பினைப் போன்று கொடிய நஞ்சு. கடிமதில் = காவல் மதில்கள். உகைத்து = செலுத்தி. மேயாய் = பொருந்தியவன். அழல் அம்பு = அக்னி கூர்மையான முனையாக அம்பினில் பங்கேற்றமை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
பொழிப்புரை:
கரிய நெருப்பினைப் போன்று கொடுமையான நஞ்சை கழுத்தில் இருத்தியவனும், காவல் மதில்கள் கொண்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும், அக்னித் தேவனை முனையாகக் கொண்ட ஓரே அம்பினைச் செலுத்தி தீயினால் எரியுமாறு செய்தவனும், செந்தழல் போன்ற வண்ணம் கொண்ட சடையினுள் கங்கையைத் தாங்கியவனும் ஆகிய சிவபெருமான், தன்னை விரும்பி நினைக்கும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கின்றார். அவர்தான், பொறுப்பதற்கு அரியதான தீயினைக் கையில் ஏந்தியவாறே நடனமாடும் ஆவடுதுறைப் பெருமான் ஆவார்.