61. கடலகம் ஏழினோடும் - பாடல் 3

தன்னை நினைக்காத மாந்தர்களுக்கு

எண்ணுடை இருக்குமாகி இருக்கினுள் பொருளுமாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கராகிக்
கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்
பெண்ணொரு பாகம் ஆகிப் பேணும் ஆப்பாடியாரே
 

விளக்கம்

இருக்கு = ரிக் வேதம். நான்கு வேதங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் ரிக் வேதம், நான்கு வேதங்களையும் குறிப்பிடுவதாக நாம் கொள்ள வேண்டும். எண்ணுடை = மிகவும் உயர்ந்ததாக எண்ணப்படும். பாங்கர் = அருகில் உள்ளவர். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்ற அப்பர் பெருமானின் வாய்மொழிக்கு ஏற்ப, இறைவன் வடமொழிப் பாடல்களாகவும், தமிழ் இன்னிசைப் பாடல்களாகவும் உள்ள நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. மொழிகளுக்கு அப்பாற்பட்டவன் அல்லவா.

பொழிப்புரை

மிகவும் உயர்ந்ததாக எண்ணப்படும் இருக்கு முதலாய நான்கு வேதங்களாகவும், அந்த வேதங்களின் பொருளாகவும், பண்ணுடன் இசைத்து தன்னைப் புகழ்ந்து பாடல்கள் பாடும் அடியார்களுக்கு மிகவும் அருகில் இருக்கும் துணைவனாகவும், தனது நெற்றியில் கண்ணினை உடையவராகவும், தன்னை நினைக்காத மாந்தர்களுக்கு அவர்கள் எண்ணுதற்கும் அரியவராகத் திகழ்பவரும், பெண்ணினை தனது உடலில் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய இறைவன், திருவாப்பாடி தலத்தில் ஆப்பாடியராக விளங்குகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com