61. கடலகம் ஏழினோடும் - பாடல் 6

மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை

வன்னி வாளரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய உருவாம் சோதி மெய்ப்பொருள் பயனுமாகிக்
கன்னியோர் பாகமாகிக் கருதுவார் கருத்துமாகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே
 

விளக்கம்

வாளரவு = ஒளி பொருந்திய பாம்பு. வன்னி = வன்னி இலை. மத்தம் = ஊமத்தம் பூ.

பொழிப்புரை

வன்னி இலை, ஒளி வீசும் பாம்பு, ஊமத்தை பூ, பிறைச் சந்திரன், கங்கை ஆறு ஆகிய பொருட்களைத் தனது தலையில் சூடிய சிவபெருமான், மின்னல் போன்று ஒளி வீசும் வடிவினனாக உள்ளான்.

அவன்தான், மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை உணர்ந்த அடியார்கள் பெறுகின்ற பயனாம் வீடுபேறாக உள்ளவன் ஆவான். உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்ட பெருமான், தன்னை தியானிக்கும் அடியார்களின் சிந்தனையாக விளங்குகின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானை அடியார்கள் இன்னிசையுடன் இசைத்து புகழ்ந்து பாடல்கள் பாடும் வண்ணம், ஆப்பாடி தலத்தில் அவன் உறைகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com