காவிரியின் வடகரைக் காண்தரு
மா விரியும் பொழில் மங்கலக்குடித்
தே அரியும் பிரமனும் தேடொணாத்
தூ எரிச் சுடர் சோதியுள் சோதியே
விளக்கம்
காண் தரு = காணத் தக்க. மா = வண்டு. விரியும் = படந்து விரியச் செய்யும். தே = தெய்வத் தன்மை பொருந்தியவன்.
பொழிப்புரை
காவிரியின் வடகரையில் கண்டுகளிக்கத்தக்கதும், தேனை உண்ணச் செல்லும் வண்டுகள் அமர்வதால் படர்ந்த விரிந்த மலர்களை உடையதும் ஆகிய சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தில் உறையும் பரமன் தெய்வத் தன்மை பொருந்தியவன். அவன் திருமாலும் பிரமனும், தனது அடியையும் முடியையும் தேடிக் காணாத வகையில், நெடிய, தூய்மையான அழலாக நீண்டவன். அவன் தான் ஆன்மா எனப்படும் சோதிக்குள்ளே சோதியாக நின்று, நம்மை இயக்கும் இறைவன் ஆவான்.