பாடல் 10:
வெங்கண் வாளரவு ஆட்டி வெருட்டுவர்
அங்கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற்கு அரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே
விளக்கம்:
வெங்கண்=கொடிய கண்கள்: வாளரவு=ஒளிவீசும் பாம்பு: அடிக்கடித் தனது தோலை உரிப்பதால் பாம்பின் உடல் ஒளி வீசும். அங்கணார்=அழகிய கண்களை உடைய சிவபெருமான். பதிகத்தின் நான்கு அடிகளிலும் கண் என்ற சொல் வருவதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
கொடிய கண்களையும், ஒளி வீசும் உடலையும் உடைய பாம்புகளைத் தனது உடலில் சுற்றிக் கொண்டு அவற்றை, தனது விருப்பம் போல் ஆட்டுபவர் சிவபெருமான். அழகிய கண்களை உடைய அவர், அடியார்களுக்கு எப்போதும் அருள் புரிபவராக இருக்கின்றார். தாமரை போன்று சிவந்த கண்களை உடைய திருமாலும் பிரமனும், அடி முடி காண முடியாமல் அவர்கள் தேடுவதற்கு அரியவராக, நீண்ட தீப்பிழம்பாக காட்சி அளித்த சிவபெருமான், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். அவர் பாலைத்துறையில் உறைகின்றார்.