பாடல் 9
தக்கார்வம் எய்திச் சமண் தவிர்ந்து சரண் புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
விளக்கம்:
மிக்கார்=சான்றோர். மற்றவர்களை விட ஒழுக்கத்தில் மிக்கவர். தக்கார்வம்=தகுந்த ஆர்வம். தான் வந்த மரபுக்குத் தகுந்த ஆர்வம். சூலை நோயினால் வருந்தி, மந்திர தந்திரங்கள் ஏதும் பயன் அளிக்காத நிலையில், தனது தமக்கையாரை அணுகியபோது, அவர் காட்டிய வழியில், அவர்களின் மரபுக்கு தகுந்தவாறு சிவபிரானின் வழிபாடு செய்தது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
பொழிப்புரை:
சான்றோர்கள் வாழும் தில்லைப் பதியினில், மிகவும் விருப்புடன் அமர்ந்தவனே, வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே, சமண சமயத்தைச் சார்ந்து வெகுகாலம் இருந்த நான் சமண சமயத்தை விட்டொழிந்து, நான் வந்த மரபுக்கு உரிய சிவவழிபாட்டினை மேற்கொண்டு உன்னை அடைக்கலமாக அடைந்தேன். இனிமேல் உன்னைப் பற்றிய செய்திகள் அல்லாமல் எந்த சமயநெறியின் மீதும் எனக்கு விருப்பம் இல்லை; அவைகளால் நான் அடையக்கூடிய பயனும் ஏதும் இல்லை.