பாடல் 10:
திருவமர் தாமரை சீர்வளர் செங்கழுநீர் கோ நெய்தல்
குருவமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி
மருவமர் நீள்கொடி மாடமலி மறையோர்கள் நல்லூர்
உருவமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே
விளக்கம்:
குருவமர்=நிறங்கள் பொருந்திய: மருவமர்=சூழப்பட்ட:
பொழிப்புரை:
திருமகள் அமரும் தாமரை மலர், சீராக வளரும் செங்கழுநீர் மலர், தலையான நெய்தல் பூ, நிறங்களுடன் காணப்படும் கோங்கம், குரா மலர், காண்போரை மகிழ வைக்கும் சண்பக மலர், கொன்றை மலர், வன்னி மலர், ஆகிய மலர்கள் கொண்ட செடிகளும் கொடிகளும் நெருங்கி வளரும் நல்லூர் தலத்தில் மறையோர்கள் வாழும் மாட மாளிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு அழகாக காணப்படும் நல்லூரில் உறைபவனும், உருவத்தில் அழகுடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய சிவபிரானை நாம் நமது மனதினில் நினைத்து தியானம் செய்வோம்.