பாடல் 9:
பைந்தளிர் கொன்றை அம் தாரார் போலும்
படைக்கணாள் பாகம் உடையார் போலும்
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்
அணி நீலகண்டம் உடையார் போலும்
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என்
உள்ளத்து இருந்தார் போலும்
எந்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
விளக்கம்:
வரவு = பிறப்பு. செலவு = இறப்பு. படைக் கணாள் = நீண்ட வேற்படையைப் போன்று நடுவில் அகன்றும் முனைகளில் குறுகியும் காணப்படும் கண்களை உடைய உமையம்மை.
பொழிப்புரை:
பசுமையான இளந்தளிர்களின் நடுவே தோன்றும் கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவரும், வேற்படை போன்று நடுவில் அகன்றும் முனைகளில் குறுகியும் அழகாக காணப்படும் கண்களை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரும், காலை மற்றும் மாலை வேளைகளில் காணப்படும் வானம் போன்று சிவந்த மேனியை உடையவரும், கழுத்தினில் அணிந்துள்ள கரிய மணி போன்று தோன்றுமாறு தான் உண்ட நஞ்சத்தை கழுத்தினில் அடக்கியவரும், அனைத்து உயிர்களுக்கும் பிறப்பையும் இறப்பையும் நிகழ்த்துபவரும், நிலையாக எனது உள்ளத்தில் தங்கி நீங்காது இருப்பவரும், என் போன்ற அடியார்களின் இடர்களை தீர்க்க வல்லவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.