பாடல் 4:
சந்திரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழிபாடுகள் செய்த பின்
ஐந்தால் அரவின் பணி கொண்டருள்
மைந்தர் போல் மணி நாகேச்சரவரே
விளக்கம்:
தலபுராணத் தகவல்களின் படி, சந்திரன் சூரியன், மற்றும் கோள் இராகு, கார்க்கோடகன், ஆதிசேஷன், நாகராஜன், தக்ஷன் ஆகிய பாம்புகளும் தலத்து இறைவனை வணங்கினார்கள். இந்த தகவல் இங்கே கொடுக்கப்படுகின்றது. உலகினைத் தனது தலையில் தாங்குவதாக கருதப்படும் ஆதிசேஷன், ஜனப்பெருக்கத்தால் பூமியின் சுமை மிகவும் அதிகரித்தபோது, பூமியைத் தாங்க முடியாமல் தளர்வடைந்து இறைவனை வேண்டி, குடந்தை கீழ்க்கோட்டம், நாகேச்சரம், பாம்புரம் மற்றும் நாகைக் காரோணம் ஆகிய தலங்கள் சென்று வழிபாட்டு, தான் இழந்த வலிமையைப் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகின்றது. இந்த இரண்டு தகவல்களும் இந்த பதிகத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. பணி=பணிவிடை; மைந்தர்=வல்லமை உடையவர்;
பொழிப்புரை:
சந்திரன் சூரியன் ஆகிய இருவரும் சிறப்பான வழிபாடுகள் செய்து நாகேச்சரத்து பெருமானை வணங்கி பல நலன்கள் பெற்ற பின்னர், ஐந்து தலைகள் கொண்ட பாம்புகள் ஆதிசேஷன், நாகராஜன் ஆகியோரும் இறைவனை வழிபட்டு அவனது அருளினைப் பெற்றனர், இவ்வாறு சந்திரன், சூரியன், பாம்புகள் ஆகியோர் வழிபடும் வல்லமை வாய்ந்த பெருமான் நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்.