பாடல் 8:
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கு இரங்கும் அவர் போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே
விளக்கம்:
கடுத்து=கோபம் கொண்டு: பாடல்=சாமகானம்; பொடி=திருநீறு
பொழிப்புரை:
தனது வழியில் குறுக்கிட்டது என்று தவறாக கருதி கயிலை மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் நெரியும் வண்ணம் கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனது ஆற்றலை அடக்கியவர் சீர்காழி தலத்தில் உறையும் பெருமானாவார். மேற்கண்டவாறு மலையின் கீழே அமுக்குண்டு வருந்திய அரக்கன் இராவணன், தனது தவறினை உணர்ந்து, சாமகானத்தால் பெருமானைப் புகழ்ந்து பாட அரக்கனுக்கு அருளிய பெருமான், தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு புனிதராக விளங்குகின்றார்.