பாடல் 6:
நகையார் வெண்தலை மாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நன் முத்தாறு
வகையாரும் வரைப் பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் எறிய மோதித்
தகை ஆரும் வரம்பு இடறிச் சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து
முகையார் செந்தாமரை கண் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே
விளக்கம்:
வரைப் பண்டம்=மலைகளில் கிடைக்கும் பொருட்கள், மணிகள், அகில், சந்தனம், முதலியன; நகை=பல்; நகையார் வெண்தலை=வாய் பிளந்து காணப்படுவதால் சிரிப்பது போன்ற தோற்றத்தினை உடைய மண்டையோடுகள்; தகை=தடுப்பு, இங்கே நதிக்கு பாதுகாப்பாக இருக்கும் கரை; இடறி=இடித்துக்கொண்டு, மோதி, வாரி இறைத்துக் கொண்டு; சாலி=செஞ்சாலி எனப்படும் ஒரு வகை நெல்.
பொழிப்புரை:
வாய் பிளந்து இருப்பதால் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் சிரிப்பது போன்று காட்சியளிக்கும் மண்டையோடுகளை தனது தலையில் தலைமாலையாக அணிந்தவனும் எமது தலைவனுமாகிய பெருமான் உறையும் இடம் முதுகுன்றம் தலமாகும். மலையில் கிடைக்கும் பல வகையான பண்டங்களை அடித்துக் கொண்டு வந்து மணிமுத்தாறு நதி தனது அலைகளால், தனக்கு பாதுகாப்பாக இருக்கும் இரண்டு கரைகளையும் உடைத்துக் கொண்டு தான் அடித்துக் கொண்டு வந்த பொருட்களை வாரி இறைத்துக் கொண்டும், நெற்கதிர்கள் கழுநீர் கொடிகள் மற்றும் குவளைக் கொடிகள் ஆகியவற்றை நீரின் வேகத்தினால் சாய்த்துக் கொண்டும் தாமரைக் கொடியில் உள்ள மொட்டுகளை வயல்களின் வரப்புகளில் மோதி மலரும் வண்ணம் புரட்டியும் முதுகுன்றம் தலத்தினை வந்து அடைகின்றது. இவ்வாறு செல்வச் செழிப்பும் நீர்வளமும் உடைய தலமாகிய முதுகுன்றமே பெருமான் உறையும் தலமாகும்.