105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 5

பல பிறவிகள்
105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 5


பாடல் 5:

    மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு
       ஒத்து ஒழியுமாறு ஆதலால்
   வியல் தீர் மேலுலகம் எய்தல் உறின் மிக்கொன்றும்
      வேண்டா விமலன் இடம்
    உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும்
        அடி பரவல் செய்
    துயர் தீர் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை
        மாடம் தொழுமின்களே

விளக்கம்;

தீர்மை=தீர்வு; ஆறு=வழி; ஓவாது=இடைவிடாது; வியல் தீர=பலவகையாக படுதல், பல வகையான பிறப்புகள் எடுத்தல்; உயர் தீர=ஓங்கி உயர்ந்து; மரணம்=அழிவு; நமது உயிரினை மலங்கள் பிணித்து உள்ளமையால் நாம் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது., நமது மலங்களின் கட்டினை அறுத்து, முக்தி உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமை, இயல்பாகவே மலங்களின் சேர்க்கை இல்லாத சிவபெருமான் ஒருவருக்கே உண்டு என்பதை உணர்த்தும் முகமாக, இந்த பாடலில் பெருமானின் பெயரினை விமலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.   

பொழிப்புரை: 

உலகத்து உயிர்கள் மீதும் உலகத்து பொருட்கள் மீது கொண்டுள்ள மயக்கம் தொடர்ந்து இருக்கச் செய்யும் வாழ்க்கைக்கு வழி வகுக்கும் பிறப்பும், ஒரு நாள் அழிந்துவிடும் என்பதால் நிலையற்ற தன்மை கொண்டவை; எனவே பல வகையான பிறப்புகள் எடுப்பதற்கு காரணமாக உள்ள பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு சிவனது உலகம் சென்று அடையவதற்கு விருப்பம் கொண்டவர்களாக விளங்கும் மனிதர்களே, நீங்கள் மிகவும் அதிகமான முயற்சி மேற்கொண்டு, பல்வேறு நெறிகளில் ஈடுபட்டு ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை; இயற்கையாகவே மலங்களின் சேர்க்கை இல்லாமல் தூயவனாக திகழும் பெருமான் உறையும் இடம் சென்று, அவனது திருநாமங்கள் பலவற்றை சொல்லி, இடைவிடாது அவனது திருவடிகளை புகழ்ந்து பணிந்து வணங்கினால் போதும். எனவே நமது துயர்களைத் தீர்க்கும் தலமாகிய கடந்தை நகர் சென்று ஆங்குள்ள அகன்ற தூங்கானை மாடமாக விளங்கும் திருக்கோயில் சென்று, அங்கே உறையும் பெருமானைத் தொழுது நீங்கள் விரும்பும் பயன் அடைவீர்களாக.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com