பாடல் 9:
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை
ஒழியத் தவம்
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்
மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்
தாய அடி அளந்தான் காண மாட்டாத் தலைவர்க்கு
இடம் போலும் தண் சோலை விண்
தோயும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம்
தொழுமின்களே
விளக்கம்
வாயும் மனம்=பொருந்திய மனம்; தாய=தாவிய; பிணி=வருத்தம்;
பொழிப்புரை:
நோயினால் உடல் மெலிந்து மனம் வருத்தமடைந்து துன்பங்களையே நுகரும் வாழ்க்கை ஒழிய வேண்டும் என்ற எண்ணத்துடன் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தினைத் தேடி அலையும் மனிதர்களே, தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், மண்ணையும் விண்ணையும் தனது ஈரடிகளால் அளந்த திருமாலும் காண முடியாமல் நின்ற தலைவனாகிய சிவபெருமான் உறையும் இடமாகிய தூங்கானை மாடம் செல்வீர்களாக. குளிர்ந்ததும் வானளாவ உயர்ந்தும் காணப்படும் சோலைகள் சூழ்ந்த கடந்தை நகரில் உள்ள தூங்கானை மாடம் திருக்கோயில் சென்று ஆங்குள்ள இறைவனைத் தொழுது. இழிந்த இந்த பிறவி ஒழிய வேண்டும் என்ற உங்களது விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வீர்களாக.