பாடல் 8:
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேனாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே
விளக்கம்:
அமர்=சண்டை; ஏய்ந்த=அமைந்த; காய்ந்தவன்=கோபித்தவன்; வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்தில் இராவணனிடம் போர் புரிந்து தோற்றவர்களின் விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
புகழ் வாய்ந்த மன்னர்களும் வீரர்களும் தேவர்களும் அஞ்சும் வண்ணம் பாய்ந்து போர் புரியும் வல்லமை வாய்ந்த இலங்கை நகரின் மன்னவனான இராவணனுக்கு அமைந்துள்ள தோள்கள் அனைத்தும் ஒடிந்து விழுமாறு கோபம் கொண்டு, தனது கால் விரலால் மலையை அழுத்தி, அரக்கனை நசுக்கிய பெருமான் இருக்குமிடம் கருப்பறியலூர் ஆகும்.