88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 5

குறிக்கப்பட்டுள்ள வாழ்நாள்
88. இடர் கெடுமாறு எண்ணுதியேல் - பாடல் 5


பாடல் 5:

    இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால்
            இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
    பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய்
            பெரியோய் என்றும் பிஞ்ஞகனே
            மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
    அழைத்து அலறி அடியேன் உன் அரணம்
            கண்டாய் அணி ஆரூர் இடம் கொண்ட அழகா என்றும்
    குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே
           குற்றமில்லை என் மேல் நான்  கூறினேனே

விளக்கம்:

இழைத்த நாள்=ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது; எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை. இறுதி அடியில் குற்றமில்லை என்ற சொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். தான் உணர்ந்த உண்மையினை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசானாக அப்பர் பிரான் திகழ்வதை, அவரே உணர்த்துவதை நாம் இங்கே காணலாம். பிஞ்ஞகன்=அழகாக பின்னப்பட்ட தலைமுடியை உடையவன். 

பொழிப்புரை:

நெஞ்சமே, உனக்கு குறிக்கப்பட்டுள்ள வாழ்நாள் முடிவதன் முன்னம், நீ பிறவிப் பெருங் கடலைத் தாண்டவேண்டும். அது எவ்வாறு இயலும் என்பதை நான் உனக்கு சொல்லிக் கொடுக்கின்றேன்; இரவும் பகலும் எமது பெருமானைத் துதித்து, வாழ்த்தி, நான் செய்த எல்லாத் தவறுகளையும் பொறுத்து அருளும் பெருமானே என்றும், தலைமுடியை மிகவும் அழகாக பின்னியிருப்பவனே என்றும், நீலகண்டனே என்றும், சுருண்ட சடையை உடைய தலைவனே என்றும், ஆரூரில் உறையும் அழகனே என்றும் பலமுறை அழைத்து கூப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொள். உனக்குப் பாதுகாவலாக இருக்கும் நான், நீ என்ன செய்யவேண்டும் என்பதனை உணர்த்திவிட்டேன். குற்றம் ஏதும் என்மேல் இனி இல்லை. நீ மேற்சொன்னவாறு செயற்படாமல் இருந்தால் குற்றம் உன்னுடையது தான், இதனை உணர்ந்து உடனே செயலில் இறங்குவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com