பாடல் 10:
மொட்டலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
கட்டமண் தேரைக் காய்ந்தீரே
கட்டமண் தேரைக் காய்ந்தீர் உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே
விளக்கம்:
கட்டமண்=பல கட்டுப்பாடுகள் உடைய வாழ்க்கையை நடத்திய சமணர்கள்; இரவு நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், ஆடையின்றி இருத்தல்; ஒரே இடத்தில் தங்காமல் பல இடங்கள் செல்லுதல், தாம் செல்லும் இடத்திற்கெல்லாம் பாய், மயிற்பீலி, குண்டிகை எடுத்து செல்லுதல் முதலிய கட்டுப்பாடுகளுடன் வாழக்கை நடத்திய சமணர்கள்; தேர்=தேரர் என்ற சொல்லின் திரிபு; தேரர்=புத்தர்கள்; காய்தல்=கோபித்தல்; சிட்டர்=நல்லொழுக்கம் உடைய அடியார்கள்; சீர்=முக்தி நிலை;
பொழிப்புரை:
மொட்டுகள் விரிவதால் நறுமணமும் அழகும் பெற்று விளங்கும் சோலைகள் உடைய முதுகுன்றம் தலத்தினை மிகவும் விரும்பி ஆங்கே பொருந்திய இறைவனே, பல கட்டுப்பாடுகள் உடைய வாழ்க்கையை நடத்தும் சமணர்களையும் புத்தர்களையும் வெறுத்து அவர்கள் மீது கோபம் கொள்பவனே, சமணர்களையும் புத்தர்களையும் கோபிக்கும் உம்மை மனதினில் தியானித்து வழிபடும் நல்லொழுக்கம் உடைய அடியார்கள் முக்தி நிலையை அடைவார்கள்.