91. தோடுடைய செவியன் - பாடல் 11

காரைக்கால் அம்மையார்
91. தோடுடைய செவியன் - பாடல் 11


பாடல் 11:

    அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை
              அலர் மேய
    பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான்
               இவன் தன்னை
    ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன்
               உரை செய்த
    திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல்
               எளிதாமே 

விளக்கம்:

அலர்=மலர், இங்கே தாமரை மலரைக் குறிக்கும்; அருநெறி=அருமையான நெறி. மேற்கூறிய பாடல்களில் பெருமானின் பல பெருமைகளை எடுத்துரைத்த சம்பந்தர், இந்த பாடலில் மனம் ஒன்றி பெருமானை வழிபட வேண்டுமென்று உணர்த்துகின்றார். இந்த பாடலில் சம்பந்தர், பதிகத்தைப் பாடுவதால் விளையும் பலன்களை எடுத்துக் கூறுகின்றார். இவ்வாறு அனைத்துப் பதிகங்களிலும், அந்த பதிகங்களைப் பாடுவதால் விளையும் பலன்களை குறிப்பிடுவதால், சம்பந்தர் அருளிய பதிகங்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப் படுகின்றன. பல வடமொழி தோத்திரங்களில் பலஸ்ருதி என்று அந்த தோத்திரங்களைச் சொல்வதால் விளையும் பலன்கள் உணர்த்தப் பட்டுள்ளதை நாம் அறிவோம். காரைக்கால் அம்மையாரும் தனது பதிகங்களில் கடைப் பாடலில், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பயனை குறிப்பிடுகின்றார்.

தேவாரப் பதிகங்களுக்கு காலத்தால் முந்தையது காரைக்கால் அம்மையார் அருளிய பாடல்கள். அம்மையார் அருளிய கொங்கை திரங்கி என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் நட்டபாடை பண்ணிலும் எட்டியிலவம் என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் இந்தளம் பண்ணிலும் அமைக்கப் பட்டுள்ளன. அம்மையாரை பின்பற்றி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தரும் சுந்தரரும், அவர் அருளிய நட்டபாடை மற்றும் இந்தளம் பண்களில் தத்தமது முதல் பாடல்களை அமைத்துள்ளது அம்மையாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது..      
 
பொழிப்புரை:

நல்ல விதமான வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமையான கருத்துக்களை உணர்த்தும் வேதங்களில் வல்லவனாகிய பிரமனால் இறைவனை வழிபடும் பொருட்டு படைக்கப் பட்டதும், அகன்ற நீர்நிலைகளில் தாமரை மலர்களை உடையதும், பெருமைக்கு உரிய முக்தி நெறியினை அளிக்க வல்லதும் ஆகிய பிரமாபுரம் என்று அழிக்கப்படும் சீர்காழி நகரினில் உறையும் பெருமானை, ஒருமைப்பாடு உடைய மனத்துடன் அவனை உணர்ந்து தியானித்து ஞானாசம்பந்தர் உரைத்த சிறந்த தமிழ் வேதமாகிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களின் பழவினைகள் எளிதினில் தீர்ந்துவிடும்.      

முடிவுரை:

ஞானசம்பந்தரின் தந்தையார் கேட்ட கேள்விக்கு, யார் கொடுத்த எச்சில் பாலினை உண்டாய் என்ற கேள்விக்கு, விடை அளிக்கும் முகமாக மொழிந்த பதிகம் என்பதால், தனது  தந்தையார் கேட்ட கேள்வியையோ, பால் கொடுத்தவர் என்று குறிப்போ இந்த பதிகத்து பாடல்களில் காணப்படவில்லை. இந்த பதிகத்தை நாம், பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தந்தையார் கேட்ட கேள்வியுள் பாலைக் குடித்த விடயம் அடங்கியுள்ளது எனவே அந்த கேள்வியுடன் நாம் இந்த பதிகத்தில் சொல்லப்படும் பதிலை இணைத்துக் கொள்ளவேண்டும். இராமபிரான் முடிசூட்டிக் கொள்ளும் பாடலில் எங்கும் இராமபிரான் பெயர் காணப்படாதது போல இந்தப் பதிகத்திலும் பருகிய பால் பற்றிய குறிப்பு இல்லை போலும்.

    அரியணை அனுமன் தாங்க அங்கதன்
                      உடைவாள் ஏந்த
    பரதன் வெண் குடை கவிக்க இருவரும்
                      கவரி பற்ற. 
    விரை செறி குழலி ஓங்க வெண்ணையூர்
                      சடையன் தங்கள்
    மரபு உளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே
                       புனைந்தான் மௌலி.
 

இந்த நிகழ்ச்சியை ஞானசம்பந்தப் பெருமான். மதுரை நகரில் தான் அருளிய, மண்ணில் நல்ல வண்ணம் என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.24.2) குறிப்பிடுகின்றார். உமையம்மை தனக்கு அளித்த பொன் கிண்ணத்தில் இருந்த பால் பற்றியும், அயலாரிடம் பால் உண்டதற்காக கோபித்துக்கொண்ட தந்தை பற்றியும் கூறி தன்னை ஆட்கொண்ட அப்பனையும் அம்மையையும் நினைவு கூறுகிறார். போதை என்றால் மலர் என்று பொருள். மலர் போன்ற தன்மை உடைய உமை அம்மை என்பதால் போதையார் என்று அழைக்கப்படுகிறார். முனிதல் என்றால் கோபித்தல் என்று பொருள். அடிசில் என்றால் உணவு, இங்கு பால் என்று பொருள் கொள்ளவேண்டும்.

    போதையார் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என
    தாதையார் முனிவு உற தான் எனை ஆண்டவன்
    காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
    பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே 

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள் என்ற தலைப்பின் கீழ் தோடுடைய செவியன் என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் பதிகமும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகமும் பித்தா பிறைசூடி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும்  வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பதிகங்களும் தேவார ஆசிரியர்கள் பாடிய முதல் பதிகங்கள் ஆகும். இவை முறையே முதல், நான்காம் மற்றும் ஏழாம் திருமுறைகளில் முதல் பாடலாக அமைந்துள்ளன. கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர் அப்பர் பிரானுக்கு உலகத்தின் குருவாகிய இறைவனின் அருள் கிடைத்து, சூலை நோய் அவரை விட்டு நீங்கியது; சுந்தரரும் திருஞான சம்பந்தரும் இறைவன் அருள் பெற்ற பின்னர் பாடிய முதல் பதிகங்கள் மற்ற இரண்டு பதிகங்கள். எனவே இந்த மூன்று  பதிகங்களையும் தினமும் பாடினால் குருவருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது., 

இயற்கை காட்சிகளை கவினுறக் கூறுவதில் சம்பந்தர்க்கு இணை சம்பந்தர் தான் என்று கருதும் அளவுக்கு, இயற்கைக் காட்சிகளை நயமாக எடுத்துரைப்பதை நாம் பல பாடல்களில் காணலாம். பாடலின் இரண்டு அடிகளில் பெருமானது பண்பு, மாண்பு, அவருடன் தொடர்பு கொண்ட பல புராண நிகழ்சிகளை ஆகியவற்றை குறிப்பிடும் சம்பந்தர் இரண்டு அடிகளில் இயற்கைக் காட்சிகளை குறிப்பிடுகின்றார். இந்த தன்மை இரயில் பயணங்களில் நாம் அன்றாடம் காணும் காட்சியை நினைவு படுத்துகின்றது என்று திரு கிவாஜா அவர்கள் கூறுவார். வேடிக்கை பார்ப்பதற்காக சிறு குழந்தைகள், ஜன்னல் ஓரத்தில் அமைந்துள்ள இருக்கைகளை நாடுவதும், அந்த குழந்தைகளுக்கு வழிவிடும் முதியவர்கள் ஒரு புத்தகமோ அல்லது செய்தித்தாளோ வைத்துக் கொண்டு அதில் ஆழ்ந்துவிடுவதையும் நாம் காண்கின்றோம். தேவாரப் பதிகங்கள் எனும் இரயில் வண்டியில் பயணம் செய்த குழந்தை திருஞான சம்பந்தர் இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்ததும், முதியவர் அப்பர் பிரான் பெருமானின் பெருமை எனும் புத்தகத்தில் தன்னை மறந்து ஆழ்ந்ததும் இயற்கை தானே. இந்த தன்மை அவர்களது பாடல்களில் வெளிப்படுகின்றது. 

பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடிய பின்னர் திருக்கடைக்காப்பு பாடி, பதிகம் நிறைவு பெற்றதை உணர்த்தும் வண்ணம், பதிகம் அளிக்கும் பயன் மற்றும் தனது பெயரையும் சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டு இறைவனைத் தொழுது நின்றார். அப்போது வானத்தில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள், கின்னரர்கள் ஒன்று கூடி மலர்மாரி பொழிந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் திருஞானசம்பந்தர் திருக்கோயிலின் உள்ளே செல்ல, அவரது தந்தையாரும் அவரைத் தொடர்ந்து பின் சென்றார். அவரது கையில் இருந்த சிறு கொம்பு, பிள்ளையாரை மிரட்டுவதற்காக எடுத்த கொம்பு, அவரையும் அறியாமல் கீழே விழ, ஆனந்தக் கூத்து ஆடியவராய் பிள்ளையார் அருளிய பாடலினைக் கேட்கும் விருப்பும் வியப்பு கலந்த உணரவும் உடையவராய், சிவபாத இருதயர் இருந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. உமையன்னை பால் ஊட்டிய நிகழ்ச்சியை நேரில் காணும் பேற்றினை பெறவில்லை எனினும், மூன்று வயதுக் குழந்தை பதிகம் பாடியதையும், தான் கேட்ட கேள்விக்கு பதிலாக இறைவன் அடையாளங்களை உணர்த்தி பாடியதையும் உணர்ந்த, சிவபாத இருதயர் நடந்த அதிசயம் இறைவனின் அருளால் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டார். விவரம் அறிந்த ஊர் மக்கள் பலரும், திருஞானசம்பந்தரை நேரில் காணும் விருப்பம் உடையவர்களாய்  திருக்கோயிலின் முன்னர் சூழ்ந்தனர்.    .       

சம்பந்தப் பெருமான் மூலம் இறைவனது பண்புகளையும் பெருமையினையும் அறிந்து கொண்ட நாம், உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்பதை உணர்ந்து, திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் சென்று, பெருமானை வணங்கி, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com