பாடல் 9:
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்
பார் அடைந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்
சீர் அடைந்து வந்து போற்றச் சென்று அருள் செய்தது என்னே
தேர் அடைந்த மா மறுகில் சேய்ஞலூர் மேயவனே
விளக்கம்:
கார்=கருமை நிறம்; கனகம் அனையான்=பொன்னிற மேனியை உடைய பிரமன்; பார் அடைந்தும்=கீழே தோண்டியும்; சீர் அடைந்து=தமது செருக்கு ஒழிந்து பணிந்த தன்மையுடன் தாமே பரம் என்ற எண்ணத்துடன் ஓருவருக்கொருவர் வாதம் செய்து கொண்டிருந்த நிலையினைத் தவிர்த்து, தங்களுக்கு மேலாகிய பரம்பொருள் சிவபெருமான் என்பதை உணர்ந்த நிலை, இங்கே சீர் அடைந்த என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. முந்தைய பாடலில் இராவணின் தேரினை குறிப்பிட்ட சம்பந்தர்க்கு சேய்ஞலூர் தலத்தின் அகன்ற வீதிகள் நினைவுக்கு வந்தன போலும். சோழ அரசர்கள் முடி சூட்டிக் கொள்ளும் ஐந்து பதிகளில் சேய்ஞலூர் ஒன்றாகும். காவிரிப்பூம்பட்டினம், உறையூர், கரூர், தில்லை, மற்றும் சேய்ஞலூர் என்பனவே இந்த ஐந்து ஊர்களாகும். இந்த தகவல் சேக்கிழாரால் பெரிய புராணத்தில் தரப்படுகின்றது. இந்த பாடலில் குறிப்பிடப்படும் அரசன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆவான்.
சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லை
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும்
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும்
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய நீடும் தகைத்து அவ்வூர்
பொழிப்புரை:
கருமை நிறமுடைய திருமாலும் பொன்னின் நிறத்தில் மேனியை உடைய பிரமனும், முறையே பன்றியாக கீழே தோண்டியும் அன்னமாக மேலே பறந்தும் பெருமானின் திருவடிகளையும் முடியையும் காணாமல் பதைத்து நின்று, தங்களின் முயற்சியால் கண்டு விடலாம் என்று செருக்கினை ஒழித்து பணிவுடன் இறைவனைப் போற்ற, தானே முன் சென்று அவர்களுக்கு காட்சி கொடுத்து பெருமான் அருள் புரிந்தது வியக்கத்தக்க செயலாகும். இத்தகைய பெருமையினை உடைய பெருமான், தேர்கள் ஓடும் அகன்ற வீதியினை உடைய சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.