பாடல் 9:
கள்ளவிழ் மலர் மேலிருந்தவன் கரியோன் என்று இவர் காண்பரிதாய
ஒள்ளெரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலை சூழ் ஆலை
ஒள்ளிய புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
விளக்கம்:
ஆலை=கரும்பு ஆலைகள்; பனி=குளிர்ச்சி;
பொழிப்புரை:
தேனுடைய தாமரை மலர் மேல் உறையும் பிரமனும், கரியோன் என்று அழைக்கப்படும் திருமாலும் ஆகிய இவர்களும் அடியும் முடியும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாக நின்ற பெருமான், உமையம்மையுடன் மிகுந்த விருப்பத்துடன் இனிதாக வீற்றிருந்து அருளும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; பள்ளத்தை நோக்கிப் பாயும் நீருடன் வாளை மீன்களும் சேர்ந்து பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர் சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும் உடையதும், புகழுடன் திகழும் சான்றோர்கள் வாழ்வதும் ஆகிய ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.