டென்மார்க்கில் உணர்வுப்பூர்வமாக நடந்த தேசிய மாவீரர் நாள்
டென்மார்க்கில் தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. அதன் பின்பு டென்மார்க் பொறுப்பாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம் நடைபெற்றது.
தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
தமிழீழ தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காண்பிக்கப்பட்டது. தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, மாவீரர் நாள் மண்டபத்தில் இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.
தமிழீழ தாய்நாட்டின் விடிவிற்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு மக்கள் திரள் திரளாக வந்து வணக்கம் செலுத்தினார்கள் .எமது விடுதலைக்காய் விதைத்தவர்களின் உணர்வுகள், இலட்சியத்தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையும், புனித தன்மை வாய்ந்தவையாகவும் இருந்தன.
மாவீரர் நாள் நிகழ்வில் எழுச்சி உரைகள், கவிதைகள், எழுச்சி நடனங்கள், நாடகம் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும் அவர்களின் வீரச் செயல்களையும் உணர்த்துபவையாக அமைந்தன.
மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமை இளையோரின் கையில் உள்ளது.
தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், 'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.