தென் ஆஸ்திரேலிய இலங்கை தமிழ்ச் சங்கத்தின் 33-வது வருடாந்தர இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வுட் சமூக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மதிப்புக்குரிய பல்லின கலாசார அமைச்சர் சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக “வன்னியின் கண்ணீர்” அமைப்பினூடாக வழங்கப்படவுள்ளது.
விளம்பர அனுசரணையின் மூலமும், நல்லுள்ளங்களின் நன்கொடை மூலமும், உள்ளூர் எழுத்தாளர் திருமதி. ராஜி வல்லிபுரநாதன் அவர்களின் “நிலவே என்னிடம் மயங்காதே” நூல் வெளியீட்டின் மூலமும் ஒரு கணிசமான தொகை, நேர்த்தியாக ஒழுங்கமைக்கபட்ட இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்டது.
திரு.சோமநாதன் அவர்கள், “வன்னியின் கண்ணீர்” அமைப்பினூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாழ்வாதார திட்டங்கள் பற்றியும், உதவிபெற்ற மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு மேம்பட்டுள்ளது பற்றியும், ஒளிப்பதிவு மூலம் விளக்கமளித்தார்.
“இணைவோம்! பகிர்வோம்!! உயர்வோம்!!!” என்ற ஸ்லோகத்துடன், ஒருங்கிணைப்பு குழுவினரின் அயராது முயற்சியின் மூலம் எதிர்பார்க்கப்பட தொகையைவிட அதிகமாக நிதி சேர்க்கப்பட்டது.
நிதி சேகரிப்பின் வெளிப்படு தன்மை, வாழ்வாதார திட்டங்கள் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகள் மற்றும் நிகழ்வு பற்றி அங்கத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களே இந்த வெற்றிக்குக் காரணம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்தனர். மெல்லிசையுடனும், அறுசுவை உணவுடனும் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது!