வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 141 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 111, ரஹானே 60 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரகானே (82) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். எதிர் முனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி இரட்டை சதம் அடித்தார். அவர் 204 ரன்களுக்கு எல்.பி.டபில்யு., முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சொந்தமண்ணில் நடந்த டெஸ்டில் ஒரே சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் சேவக்கை (2004-05ல் 1105 ரன், 17 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டன் கோலி, முதலிடம் பிடித்தார்.
இந்திய அணி சற்றுமுன் வரை 5 விக்கெட் இழப்புக்கு 528 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. தற்போது சகா 27 ரன்களுடனும், அஸ்வின் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.