இந்திய அணி பயிற்சியாளர்: ரேஸில் முந்தும் ரவி சாஸ்திரி-சேவாக்!
இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கடந்த ஜூன் 18-ந் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு விலகினார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜூலை 26-ந் தேதி இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னர் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.
எனவே, ரவி சாஸ்திரி, விரேந்திர சேவாக், க்ரெய்க் மெக்டெர்மாட், லான்ஸ் க்ளூஸ்னர், ராகேஷ் ஷர்மா, லால்சந்த் ராஜ்புட், பில் சிம்மன்ஸ், டாம் மூடி, தோட்ட கணேஷ், ரிச்சர்ட் பைபஸ், ஆகியோர் இதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.
அடுத்த தலைமைப் பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக சச்சின், கங்குலி, லக்ஷமண் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, சேவாக், பைபஸ், ரவி சாஸ்திரி, சிம்மன்ஸ், மூடி, ராஜ்புட் ஆகிய 6 பேரை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளது.
இந்த 6 பேரில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சேவாக் மற்றும் ரவி சாஸ்திரி இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நடந்த நேர்முகத் தேர்வில், ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு அனில் கும்ப்ளேவை இந்திய அணியின் பயிற்சியாளராக கங்குலி தேர்வு செய்தது நினைவிருக்கலாம்.