பிபா உலகக்கோப்பை கால்பந்தின் காலிறுதி சுற்று போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் உருகுவே - பிரான்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
33-ஆவது நிமிடத்தில் உருகுவே அணிக்கு ஃபிரீ கிக் கிடைக்க, அந்த அணி அதனை கோலாக மாற்றவில்லை.
இதைத்தொடர்ந்து, 39-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ரபேல் வரானே காலிறுதி சுற்றின் முதல் கோலை அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் கூடுதல் 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற முன்னிலையுடன் இருந்தது.
பிறகு 2-ஆவது பாதி ஆட்டம் தொடங்கியது. 62-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆண்டோய்ன் கீரீஸ்மேன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். உருகுவே கோல்கீப்பர் முஸ்லேரா கைக்கு மேல் வந்த பந்தை தடுக்க முயன்றார். பந்து அவரது கையில் பட்டபோதும் கோல் வலைக்கு சென்று கோலானது.
இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-0 என வலுவான முன்னிலை வகித்தது. இந்த நேரத்தில், உருகுவே அணியின் வெற்றி மிகவும் கடினமானது. தொடக்கம் முதலே அச்சுறுத்தும் வகையில் நெருக்கடி தராமல் விளையாடி வந்த உருகுவே அணி தொடர்ந்து சொதப்பலை வெளிப்படுத்தியது.
இதையடுத்து, போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டபோதும் உருகுவே அணியால் கடைசி வரை 1 கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியை தொடர்ந்து பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும்.