18-வது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
இன்று நடைபெற்ற ஆடவர் 4 பேர் துடுப்புப் படகுப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய அணி.
சவர்ன் சிங், தத்து போகனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 நொடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் துடுப்புப் படகு விளையாட்டில் இந்திய அணி பெறும் இரண்டாவது தங்கம் இது. 2010-ல் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.
இன்று மட்டும் படகுப் போட்டியில் இந்திய அணிக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவர் இலகுரக துடுப்புப் படகு ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் துஷ்யந்த் வெண்கலம் வென்றார். கடந்த ஆசியப் போட்டியிலும் இவர் வெண்கலம் வென்றிருந்தார். அடுத்ததாக இலகுரக துடுப்புப் படகு இரட்டையர் பிரிவில் ரோஹித் குமார், பகவான் சிங் ஆகியோர் இணைந்து வெண்கலம் வென்றார்கள்.
இந்திய அணி 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. சீனா 59 தங்கம் உள்ளிட்ட 121 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.