ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.
2020 ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்காக ஆசியப் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்புடன் இந்தியா ஆடவர் அணி களமிறங்கியது. ஏ பிரிவில் தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றிபெற்றது. பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற மலேசிய ஆடவர் அணியை அரையிறுதியில் எதிர்கொண்டது.
முதல் பாதியில் இந்திய அணியால் ஒரு கோலும் அடிக்கமுடியாமல் போனது. மூன்றாவது காலிறுதிப் பகுதியில் இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்து இந்திய அணி முன்னிலை பெறும் வாய்ப்பை உருவாக்கினார். அடுத்தச் சில நிமிடங்களில் மலேசிய அணி கோல் அடித்து சமன் செய்தது. இந்தப் பரபரப்பான கட்டத்தில் இந்திய அணி உடனடியாக பெனால்டி கார்னர் மூலமாக அடுத்த கோலை அடித்தது. இதனால் நான்காவது காலிறுதி அனைவரும் எதிர்பார்க்கும் விதத்தில் அமைந்தது.
இந்திய அணி வெற்றியை நெருங்கும் சமயத்தில் ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்த நிலையில் பெனால்டி கார்னர் மூலமாக மலேசிய அணி கோல் அடித்து மீண்டும் சமன் (2-2) செய்தது.
இதனால் ஷுட் அவுட் முறையில் வெற்றி பெறும் அணி தீர்மானிக்கப்பட்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணி வெற்றி பெற்று (7-6) இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் தோற்றது இந்திய ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளது.