'உலகக் கோப்பை கால்பந்து 2018' குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் பிரான்ஸ் அணியுடன் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி மோதியது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் முதல் பாதியில் துல்லியமாகத் தடுக்கப்பட்டன. 58-ஆவது நிமிடத்தில் க்ரீஸ்மான் அடித்த கோல் மூலம் பிரான்ஸ் அணி தனது கோல் கணக்கை தொடங்கியது.
பின்னர் 61-ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனல்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஜெடனிக், அதை கோலாக மாற்றினார். இதனால் ஆஸ்திரேலியா 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.
ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில், பிரான்ஸ் வீரர் ஃபோபா அற்புதமாக செயல்பட்டு 81-ஆவது நிமிடத்தில் துல்லியமாக கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து போட்டி முடியும் வரை இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.