கேரளாவில் காணாமல் போன ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகர் ஞாயிற்றுக்கிழமை பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து 2018 நடைபெற்று வரும் இந்த நேரத்தில், அதுவும் மெஸ்ஸியின் பிறந்த தினத்தில் இக்கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து திகழ்கிறது. அங்கு பிரேசில், ஆர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகளின் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
ஜூன் 21-ஆம் தேதி ஆர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் குரோஷியா, பலம் வாய்ந்த ஆர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் வசிக்கும் டினு ஜோஸப் என்ற 30 வயது ஆர்ஜென்டினா ரசிகர் ஜூன் 22-ஆம் தேதி முதல் காணாமல் போனார். மேலும், இனி இந்த கால்பந்து உலகக் கோப்பையில் நான் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன், இதற்கு யாரும் காரணமில்லை என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், 2 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பின்னர் டினு ஜோஸப்-இன் உடல் கோட்டயத்தில் உள்ள இல்லிக்கல் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது.