தமிழகத்தில் நிலவும் காவிரி பிரச்னையை முன்னிட்டு ஐபிஎல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளும் நடைபெறக்கூடாது என்கிற கோரிக்கைகளும் அதிகமாகி வருகின்றன. காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை தடை செய்ய வேண்டும். ஐபிஎல் போட்டிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறம் தள்ளினால், மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் ராஜாஸ் கல்லூரியில் நடைபெறவிருந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்துகொள்வதாக இருந்தது.
எனினும், ஐபிஎல் போட்டிக்கு எதிராகத் தமிழ்நாட்டில் உருவாகிவரும் எதிர்ப்பலையின் காரணமாக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நிகழ்ச்சியில் ரெய்னா கலந்துகொண்டால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புண்டு என்பதால் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது.
இயல்பு நிலைமை திரும்பியவுடன் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது ரெய்னாவை மீண்டும் அழைப்போம் என்று கல்லூரி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.