ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை, மகன் ஆகிய இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் சென்னையில் ஐபிஎல்-ஐ முன்வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சென்னை வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் தெருவில் உள்ள தேநீர் கடையில் வாடிக்கையாளர்களை ஆசை வார்த்தை கூறி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவது காவல்துறைக்குத் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் மாறுவேடத்தின் கண்காணித்தபோது சூதாட்டத்தின் செயல்பாடுகளைக் கண்டறிந்தார்கள்.
வாட்ஸ் ஆப் வழியாக எந்த அணியின் மீது ஒருவர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுகிறாரோ அவருக்கு அந்த அணி ஜெயித்தால் இரட்டிப்பு மடங்கில் பணம் கிடைக்கும். இதனால் இந்தச் சூதாட்டத்தில் பலரும் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இதையடுத்து தேநீர் கடையில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முகமது ஷெரீப், அவரது மகன் சையது அபுதாகிர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள்.
அவர்களிடமிருந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காகப் பயன்படுத்திய செல்பேசியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள்.
கைதான தந்தை, மகன் ஆகிய இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். பிறகு அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.