இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 2-ஆம் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 9, துணைக் கேப்டன் ரஹானே 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விராட் கோலி இதுவரை மொத்தம் 50 பந்துகளை மட்டும் சந்தித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து 4 முறை ஆட்டமிழந்துள்ளார்.
கடந்த 2014 தொடரின் போது விராட் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் கடந்த 3 சீசன்களாக அவரது ஆட்டம் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்து வருகிறது. அதுபோல காயம் காரணமாக மிக நீண்ட ஓய்வில் இருந்து ஆண்டர்சனும் தற்போதுதான் விளையாடுகிறார்.
எனவே இவ்விரு வீரர்களுக்கு இடையிலான சவால்கள் இந்த தொடரின் 5 போட்டிகளில் கடுமையாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுபோல ரசிகர்களும் இதை மிக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.