ஒரு ஓவர் போதும், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடலாம்.
நேற்றைய ஹைதராபாத் - கொல்கத்தா ஆட்டத்தில் அதுதான் நடந்தது.
20-வது ஓவரில் ஹைதராபாத் அணியுடன் ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளது கொல்கத்தா அணி. மற்றபடி பேட்டிங் செய்தபோது மீதமுள்ள 19 ஓவர்களிலும் அதன் கையே ஓங்கியிருந்தது. இருந்தும் கடைசி ஓவரில் தடுமாறியதால் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. டி20-யின் விநோதங்களில் இதுவும் ஒன்று.
கொல்கத்தா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்தது.
ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான ஐபிஎல் பிளே ஆஃப் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 174 ரன்களை எடுத்தது. இறுதி ஓவரில் ரஷித் 24 ரன்களைக் குவித்தார். அவர் 34 ரன்கள் எடுத்து கடைசிக் கட்டத்தில் அணியின் ஸ்கோரைப் பெரிதாக உயர்த்தினார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டையும், கார்லோஸ், கெளல் தலா 2 விக்கெட்டையும், ஷகிப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் இறுதிச் சுற்றில் நுழைந்தது. வரும் 27-ம் தேதி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையுடன் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் மோதுகிறது.
சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தும், மேலும் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ரஷித் கான் 4 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 174 ஆக உயர்த்தி நம்பமுடியாத வெற்றியை தனது அணிக்கு அளித்துள்ளார்.
எனினும் கொல்கத்தா பேட்டிங் செய்தபோது ஒவ்வொரு ஓவரின்போதும் ஹைதராபாத் அந்த சமயத்தில் எடுத்த ஸ்கோரை விடவும் அதிகமாக ரன்கள் எடுத்து வந்தது. உதாரணமாக...
முதல் ஓவரின் முடிவில் - ஹைதராபாத் 4 ரன்கள், கொல்கத்தா 6 ரன்கள்
6-வது ஓவரின் முடிவில் - ஹைதராபாத் 45 ரன்கள், கொல்கத்தா 67 ரன்கள்
10-வது ஓவரின் முடிவில் - ஹைதராபாத் 79 ரன்கள், கொல்கத்தா 93 ரன்கள்
15-வது ஓவரின் முடிவில் - ஹைதராபாத் 113 ரன்கள், கொல்கத்தா 118 ரன்கள்
19-வது ஓவரின் முடிவில் - ஹைதராபாத் 150 ரன்கள், கொல்கத்தா 156 ரன்கள்
திருப்புமுனையே 20-வது ஓவரில்தான் ஏற்பட்டது. 19-வது ஓவரின் முடிவில் ஹைதராபாத்தை விடவும் 6 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது கொல்கத்தா. ஆனால் ஹைதராபாத், ரஷித் கானின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்தது. ஆனால் கொல்கத்தா அணி 19-வது ஓவரின் முடிவில் 6 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தபோதும், 20-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆகவே தோல்வியடைந்தது.
ஆம். 20-வது ஓவரில் சொதப்பியதால் மட்டுமே கொல்கத்தா அணியால் வெற்றி பெறமுடியாமல் போய்விட்டது. ஆனால் ஹைதராபாத் அணி 20-வது ஓவரில் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் எடுத்தது. அதுவே ஆட்டத்தின் முக்கியத் திருப்புமுனையாகிவிட்டது. அந்த அடியைத் தாங்கமுடியாமல் தோல்வியடைந்துவிட்டது கொல்கத்தா.
ஆக, டி20 ஓவரில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர ஒரே ஒரு ஓவர் போதும். அதற்கு இந்த ஆட்டமே சிறந்த உதாரணம்.