புதுதில்லி: மயக்க மருந்து கொடுத்து என்னை கற்பழித்தார் என்று அர்ஜூனா விருது பெற்ற தன்னுடைய பயிற்சியாளர் மீது துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஒருவர் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்த வீராங்கனை தில்லி சாணக்யபுரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அவரை கடந்த 2 வருடங்களாக எனக்கு தெரியும். இந்திய விளையாட்டு கழகத்தின் சார்பாக தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சியின் பொழுதுதான் அவரை சந்தித்தேன். அவர் எனக்கு பயிற்சியாளராகவும்பணியாற்றினார். என்னை திருமணம் செய்து கொள்வேன் என்றுஉறுதி மொழி கொடுத்தார். நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். இந்நிலையில் கடந்த மாதம் எனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கற்பழித்து விட்டார்.
இவ்வாறு அந்த வீராங்கனை தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அளித்த புகாரின் பேரில் டெல்லி சாணக்யபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. நாங்கள்ச ட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.