உச்ச நீதிமன்ற உத்தரவு: அனுராத் தாக்குர் கருத்து!

பிசிசிஐயின் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டரை நியமிக்க உள்ளது லோதா குழு.
உச்ச நீதிமன்ற உத்தரவு: அனுராத் தாக்குர் கருத்து!

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கின் ஒருபகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. 70 வயதுக்கு மேற்பட்டோர் பிசிசிஐ பொறுப்புகளில் இருக்கக் கூடாது; அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பிசிசிஐ நிர்வாகிகளாக இருக்கக்கூடாது; தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிசிசிஐ பதிலளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் பிசிசிஐ காலதாமதம் செய்து வந்தது. நீதிமன்ற உத்தரவுகளை பிசிசிஐ மதித்து நடக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

லோதா குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தாத வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ நிதி அளிக்கக் கூடாது. ஆடிட்டரை நியமித்து பிசிசிஐயின் பணப் பரிவர்த்தனைகளை லோதா கமிட்டி ஆய்வு செய்யவேண்டும். லோதா பரிந்துரைகளை அமல்படுத்தியது தொடர்பாக பிசிசிஐ தலைவர், செயலாளர் ஆகியோர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யவேண்டும். என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனையடுத்து, பிசிசிஐயின் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டரை நியமிக்க உள்ளது லோதா குழு.

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் இதுகுறித்து கூறும்போது: லோதா பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள சிரமங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். அதன்மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மாநில சங்கங்கள்தான் லோதா பரிந்துரைகளை முறையாக அமல்படுத்தவேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com