உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் அணியைத் தோற்கடித்தது. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆரம்பம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முதல் பாதி ஆட்டத்தில் ஈரான் அணி 18-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற, 2-ஆவது பாதியில் இந்தியாவின் அஜய் தாக்குர் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
இதனால் சரிவிலிருந்து மீண்ட இந்தியா, இறுதியில் 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக அஜய் தாக்குர் 12 புள்ளிகளைப் பெற்றார்.
கடந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்திலும், ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் இந்தியாவிடம் ஈரான் தோற்றது குறிப்பிடத்தக்கது.