பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இதில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபனில் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார். அந்த குறையைத் தீர்க்கும் வகையில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது முதல் சுற்றில் ஹாங்காங்கின் இப் புய் இன்னை சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இங்கிலாந்தின் ராஜீவ் ஒளசெப்பையும், அஜய் ஜெயராம், தகுதி நிலை வீரரையும், எச்.எஸ்.பிரணாய், தாய்லாந்தின் பொன்சனாவையும், சாய் பிரணீத், தென் கொரியாவின் லீ ஹியூனையும் எதிர்கொள்கின்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்கவிருந்த இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி போட்டியிலிருந்து விலகியுள்ளது.