ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், இந்தியா வெற்றி பெற 261 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் 4வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று, பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். நியூசிலாந்து அணி இத்தொடரில் வென்ற முதல் டாஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. . இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதில் தவல் குல்கர்ணி சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஹென்ட்ரி மற்றும் ரோஞ்சி ஆகியோருக்குப் பதிலாக சோடி மற்றும் தேவ்சிச் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஆட்டம் தொடங்கியது முதலே நியூசிலாந்து அடித்து விளையாடியது. தொடரில் இதுவரை சிறப்பாக செயல்படாத கப்தில் இன்று சிறப்பாக ஆடினார். அவர் அதிகபட்சமாக 72 ரன்கள் விளாசினார். கேப்டன் வில்லியம்சன் 41 ரன்களும், லதாம் மற்றும் டைலர் முறையே 39 மற்றும் 35 ரன்களும் எடுத்தனர்.
ஆட்டத்தின் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருகைக்கு பிறகு நியூஸிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது.முடிவில் நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் , உமேஷ் யாதவ், குல்கர்ணி, பாண்ட்யா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையம் வீழ்த்தினர்.