தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகளில், சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பாலக்கோடு பேந்தர்ஸ் கூடைப்பந்துக் கழகம் சார்பில் 7-ஆவது ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் கடந்த 22-ஆம் தேதி பாலக்கோட்டில் தொடங்கின. மாநிலம் முழுவதும் இருந்தும் 28 அணிகள் இதில் பங்கேற்றன. இறுதிச்சுற்று போட்டிகள் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றன. இதன் முடிவில், முதலிடத்தை சென்னை ஹஸ்ட்லர்ஸ் அணியும், இரண்டாமிடத்தை ஒசூர் பிபிசி அணியும், 3-ஆம் இடத்தை மேட்டூர் ராயல் கிளப் அணியும், 4-ஆம் இடத்தை பாலக்கோடு பேந்தர்ஸ் கிளப் அணியும் பெற்றன.
இறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடக்கி வைத்தார். வெற்றிபெற்ற அணிகளுக்கான சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை பாலக்கோடு பேந்தர்ஸ் கூடைப்பந்துக் கழகச் செயலர் எஸ். குணசேகரன் வழங்கினார்.