புதிய வருமானப் பகிர்வு முறையின்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூடுதலாக வழங்க முன்வந்த ரூ.643 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிராகரித்துள்ளது.
இதுகுறித்து, பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஐசிசி சேர்மன் சஷாங்க் மனோகர், புதிய வருமானப் பகிர்வு முறையின்படி பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.643 கோடி வழங்க முன்வந்தார். இதுகுறித்து யோசித்து முடிவு கூற அவகாசம் வழங்கினார். எனினும், புதிய வருமானப் பகிர்வு முறையை ஒப்புக்கொள்ள விரும்பாததால், அந்த வருமானத்தை நாங்கள் ஏற்கவில்லை.
இந்தக் கூடுதல் வருமான முடிவானது, சேர்மனாக இருக்கும் சஷாங்க் மனோகர் மேற்கொண்டதாகும். யாருக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை ஐசிசியின் உறுப்பினர்களான அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்ய வேண்டுமே தவிர, சேர்மன் முடிவு செய்ய முடியாது.
இந்த விவகாரத்தை ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கலாம். பிசிசிஐ-க்கு ரூ.500 வழங்கப்பட்டு வரும் நிலையில், இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு ரூ.100 வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது, அந்த இதர நாட்டு வாரியங்களுக்கு ரூ.200 அளிக்க உறுதியளிக்கும் மனோகர், அதற்காக பிசிசிஐக்கு வழங்க வேண்டிய தொகையை ரூ.300-ஆக குறைக்க முயற்சிக்கிறார்.
எங்களை பொருத்த வரையில், பிசிசிஐயின் வருமானத்தை ரூ.500 என்ற அளவில் இருந்து குறைக்காமலே, இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் வருமானத்தை ரூ.200-ஆக அதிகரிக்கும் வருமானப் பகிர்வு முறையை உறுதியளிக்கிறோம். அதற்கு எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
புதிய வருமானப் பகிர்வு முறை தொடர்பாக அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியத்துடனும் கலந்தாலோசித்து வருகிறோம். அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் என்றார்.
தற்போதுள்ள வருமானப் பகிர்வு முறைப்படி, ஐசிசியிடம் இருந்து பிசிசிஐக்கு ரூ.3,727 கோடி கிடைக்கிறது. சஷாங்க் மனோகரின் முன்மொழிவை ஏற்கும் பட்சத்தில், பிசிசிஐயின் பங்கானது ரூ.1,867 கோடியாகக் குறையும்.
இதனை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுவும் கூட ஏற்கவில்லை. அத்துடன், குழுவின் தலைவர் விக்ரம் லிமாயி ஐசிசி கூட்டத்தில், புதிய வருமானப் பகிர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.