இந்தியா, இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், காலேவில் நடந்த முதல் டெஸ்டில் 304 ரன்கள் வித்தியாசத்திலும், கொழும்புவில் நடந்த 2-ஆவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றிகளைப் பதிவு செய்தது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களையும் வென்று புதிய வரலாற்றுச் சாதனையையும் படைத்தது.
இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடந்த 4-ஆம் நாளுடன் நிறைவு பெற்றது. அன்றைய தினம் நண்பர்கள் தினமாக அமைந்தது. இத்தருணத்தில் விராட் கோலி ஒரு முக்கிய நபரைச் சந்தித்தார். அவர், தொழில்முறை மல்யுத்த வீரர் தி கிரேட் காலி.
WWE எனப்படும் தொழில்முறை மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று வருபவர் தான் இந்த தி கிரேட் காலி. இவரது நிஜப்பெயர் தலிப் சிங் ராணா ஆகும். சுமார் 7 அடி வரை உயரமும், 400 கிலோ எடையும் இருப்பவர்.
இவர்கள் இரண்டு பேரும் இடம்பெற்ற படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விராட் கோலி கூறியதாவது: தி கிரேட் காலியை சந்திப்பதில் அளவில்லா மகழ்ச்சி அடைகிறேன். என்ன ஒரு மனிதர் என புகழ்ந்துள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டியில் உள்ள பல்லகலே மைதானத்தில் ஆகஸ்ட் 12 முதல் 16 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வெற்றிபெற்று 3-0 என ஒயிட்-வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.