சீன ஓபன்: ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 7-ஆவது முறையாக களமிறங்குகிறார் ஷரபோவா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சீன ஓபனில் மீண்டும் விளையாடவிருக்கிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டில் ஆசியாவில் நான் பங்கேற்கவுள்ள முதல் போட்டி இதுதான். அதனால் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான கார்பைன் முகுருஸா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சீனாவின் ஜங் ஷுவாய், பெங் ஷுவாய் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதன் காரணமாக 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரலில் மீண்டும் டென்னிஸூக்கு திரும்பிய ஷரபோவா, இதுவரையில் 4 தொடர்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். தொடர் காயம் காரணமாக அவர் தற்போது ஓய்வில்இருந்து வருகிறார்.