இந்தியா ரன்கள் குவிப்பு: தவன் அபார சதம்; ராகுல் அரை சதம்!

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களான தவன், ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி...
இந்தியா ரன்கள் குவிப்பு: தவன் அபார சதம்; ராகுல் அரை சதம்!

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களான தவன், ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தடை காரணமாக ஜடேஜா இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் வென்று இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்தும்பட்சத்தில் வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் எதிரணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கிய முதல் இந்திய அணி என்ற பெருமை கோலி படைக்குக் கிடைக்கும். 85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும் 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை. அதேநேரத்தில் இலங்கை அணி சொந்த மண்ணில் 'ஒயிட் வாஷ்' தோல்வியை தவிர்க்கப் போராடும். அந்த அணி தற்போது பலவீனமாக இருப்பதால், இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. எனவே அந்த அணி இந்தப் போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பம் முதல் இந்தியத் தொடக்க வீரர்களான ராகுலும் தவனும் வேகமாக ரன்கள் குவிக்க முயன்றார்கள். இதனால் 9.1 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதேபோல ரன்கள் கிடைத்ததால் 107 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தது இந்தியா. பேட்டிங்குக்குச் சாதகமான பிட்ச் என்பதால் ரன்கள் குவிக்க இருவருக்கும் எந்தவொரு சிரமும் ஏற்படவில்லை. இருவரில் தவன் 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். பிறகு ராகுல் 67 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்தது. ராகுல் 67, தவன் 64 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

பிரமாதமாக விளையாடி வந்த ராகுல் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்திய அணி 40 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 

இதன்பின்னர் வழக்கம்போல வேகமாக ரன்கள் குவித்த தவன், 107 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய ஆறாவது சதமாகும்.

இதன்பின்னர் வரிசையாக இரு விக்கெட்டுகள் வீழ்ந்தன. தவன் 119 ரன்களில் புஷ்பகுமாரா பந்துவீச்சில் வெளியேறினார். தொடக்க வீரர்கள் போல புஜாராவும் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 ரன்களில் சன்டாகன் பந்துவீச்சில் வீழ்ந்தார். 

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 56 ஓவர்களில் 235 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 11, ரஹானே 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com