இலங்கை அணி ஒருநாள் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அந்த அணிக்கு முக்கியமான ஒன்றாகும்.
5 ஒருநாள் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் இலங்கை அணியால் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறமுடியும். தரவரிசையில் 88 புள்ளிகள் கொண்ட இலங்கை அணிக்கு அந்த இரண்டு வெற்றிகள் மூலம் மேலும் இரு புள்ளிகள் கிடைத்து, 90 புள்ளிகளைப் பெற்று உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுவிடும்.
செப்டம்பர் 30 வரை போட்டியை நடத்துகிற இங்கிலாந்து அணியோடு 7 அணிகள் புள்ளிகளின் அடிப்படையில் தேர்வாகும். 78 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, செப்டம்பர் 30 வரை அது விளையாடும் ஆறு ஒருநாள் போட்டிகளை வென்றாலும் அதிகபட்சமாக 88 புள்ளிகளையே பெறும். இதில் அயர்லாந்துடன் விளையாடும் ஒருநாள் போட்டியில் தோற்றுப்போனால் அந்த அணியால் உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறமுடியாது. ஒருவேளை அந்த அணி 6 ஒருநாள் போட்டிகளையும் வென்று இலங்கை அணி ஒன்றில் மட்டும் ஜெயித்தால், பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி நேரடியாகத் தகுதி பெற்றுவிடும்.
இந்தச் சிக்கலான சூழலில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கின்றன.