இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாடிய அஸ்வின், பல சாதனைகளைப் படைத்தார். ஆனால் இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அஸ்வின் (30 வயது), தற்போது டெஸ்ட் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருப்பவர். ஆனாலும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை மெச்சும்படியான சாதனைகளை எதுவும் செய்துவிடவில்லை.
2015 உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்தியா விளையாடிய 37 ஒருநாள் போட்டிகளில் 15-ல் மட்டுமே அஸ்வின் பங்கேற்றுள்ளார். இதில் குறிப்பிடும்படியான சாதனைகள் எதுவுமில்லை.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் அஸ்வினுக்கு ஒருநாள் போட்டிகளில் அதை நிகழ்த்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதை உறுதிபடுத்தும்படிதான் அவரது ஆட்டமும் அமைந்துள்ளது.
மேலும், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அஸ்வினின் ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அஸ்வின், மிகவும் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவரது திறமை அற்புதமானது. இதுவரை என்ன நடந்தது என்பது முக்கியமில்லை.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் அஸ்வினுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எப்போதும் குறையாது. ஏனெனில் அவரது பங்களிப்பு மிக அவசியமானது.
அஸ்வினுடைய திறமை, அணுபவம் ஆகியன அவரை மேலும் சிறக்கச் செய்யும். கடந்த முறை மே.இ.தீவுகளுடன் நடந்த ஒருநாள் தொடரில் கூட அஸ்வின் சிறப்பாகவே பந்துவீசினார். விரைவில் இதிலும் அவர் சாதிப்பார்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் அனைத்து வீரர்களும் ஒன்றுதான். எனவே அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் சரியான முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்.
ஒவ்வொரு பந்துவீச்சாளரின் பணிச்சுமையும் கூர்ந்து கவனிக்கப்டுகிறது. வீரர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தோடு சுழற்சிமுறையில் களமிறக்கப்படுவர்.
பயிற்சி எவ்வளவு தான் எடுத்தாலும், களத்தில் சாதிப்பது என்பது வேறு. அது முழு உடல்தகுதியுடன் இருக்கும் போதுதான் சாத்தியமாகும்.
ஒரு பந்துவீச்சாளருக்கு திறமை ஐம்பது சதவீதம் என்றால் உடல்தகுதி மீதி ஐம்பது சதவீதம் ஆகும். அப்போதுதான் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும்.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அடுத்தடுத்து தொடர்கள் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். பந்துவீச்சாளர்களின் உடற்திறனில் தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.