இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தப் போட்டியில் இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அரை சதம் எடுத்தார். ரோஹித் சர்மா அதிரடியாக ரன் சேர்க்க, 10 ஓவர்களில் 64 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரை சதமடிக்க, 15 ஓவர்களில் 102 ரன்களை எட்டியது இந்தியா. ரோஹித் சர்மா 45 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து தனஞ்ஜெயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவர்களில் 109 ரன்கள் குவித்தது.
இந்த அரை சதத்தின் மூலம் தொடர் சொதப்பல்களுக்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறார் ரோஹித் சர்மா. உலகமெல்லாம் ரோஹித் சர்மா சாதித்துக் காட்டினாலும் இலங்கை மட்டும் அவருக்கு ராசியில்லாததாக உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பு இலங்கையில் அவர் விளையாடிய 10 ஆட்டங்களில் அவர் 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 3.70. (4, 0, 11, 5, 5, 0, 0, 4, 4, 4).
இந்நிலையில்தான் நேற்றைய ஆட்டத்தில் அவர் அரை சதம் எடுத்து தன்னுடைய துரதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இலங்கையில் அவர் கடந்த 10 இன்னிங்ஸ்களிலும் எடுத்த ரன்களை விடவும் இந்த ஆட்டத்தில் கூடுதல் ரன்கள் எடுத்துள்ளார். தொடரட்டும் அவருடைய வெற்றிக் கணக்கு.