உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். இதன்மூலம் இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்கள்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் யூவை வீழ்த்தினார். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சிந்து, 39 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
சிந்து தனது அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான சென் யூஃபெய்யை சந்திக்கிறார். சிந்து ஏற்கெனவே இரு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மரை 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். சாய்னா தனது அரையிறுதியில் ஜப்பானின் ஒஹுஹுராவைச் சந்திக்கிறார்.
அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் சாய்னா, சிந்து ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்கள்.