இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
இதையடுத்து நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி கொழும்புவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இப்போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 300-ஆவது ஒருநாள் போட்டியாகும்.
கடந்த 2004-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். பின்னர் 2009-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இதையடுத்து டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட அனைத்தையும் வென்று அசாத்திய சாதனைப் புரிந்தார்.
இதுவரை 299 போட்டிகளில் விளையாடிய தோனி 9608 ரன்கள் குவித்துள்ளார். இதில் 10 சதங்களும், 65 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில், 300-ஆவது ஒருநாள் போட்டியில் தோனிக்கு வாய்ப்பு இருந்தால் இரண்டு புதிய உலக சாதனைகளைப் படைக்க முடியும்.
தனது 300-ஆவது போட்டியில் இன்னும் ஒரே ஒரு ஸ்டம்பிங் செய்தால் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் புரிவார்.
அதுபோல இதுவரை விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 72 முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் மற்றும் இலங்கையின் சமிந்தா வாஸுடன் அதிக முறை ஆட்டமிழக்காதவர் என்ற சாதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால் அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் என்ற புதிய உலக சாதனையைப் படைப்பார்.