இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வேகமான ரன்கள் குவித்து வருகிறது. இந்திய கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான தோனி விளையாடும் 300-வது போட்டி இது. இதற்காக இந்திய கேப்டன் கோலி, தோனிக்கு ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்.
பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார் தவன். முதல் 3 ஓவர்கள் வரை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்த இந்திய அணி அதன்பிறகு தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கோலியும் ரோஹித் சர்மாவும் மாறி மாறி பவுண்டரிகள் எடுத்தார்கள். நான்காவது ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அடித்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் கோலி. 8.4 ஓவர்களில் சிக்ஸ் அடித்து இந்திய அணி 50 ரன்கள் எட்ட உதவினார் கோலி. பிறகு 38 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் கோலி. ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 45-வது ஒருநாள் அரை சதமாகும். இதற்கு முன்பு 11-வது ஓவரில் கோலி அரை சதம் எடுத்ததில்லை. 2012-ல் மிர்புரில் பாகிஸ்தானுக்கு எதிராக 16-வது ஓவரில் அரை சதம் எடுத்ததே ஓவர் அடிப்படையில் அவருடைய வேகமான அரை சதமாகும்.
13-வது ஓவரின் முடிவில் தொடர் பவுண்டரி, சிக்ஸர்களால் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.